தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர் பகுதியில் நாளை முதல் வரும் 24ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் பகுதிக்கு வருகை தர வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு பொதுமக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினை சீரமைக்கும் நோக்கிலும் நாளை முதல் வரும் 24ம் ேததி வரை தி.நகர் பகுதியில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

தேவைக்கேற்ப ஆட்டோக்களின் இயக்கமானது, தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்தும், ரோகிணி சிக்னல் சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் கோட்ஸ் சாலை சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பிலிருந்தும், பிருந்தாவன் சந்திப்பிலிருந்தும் மற்றும் கண்ணம்மாபேட்டை சந்திப்பிலிருந்தும் பனகல் பூங்கா நோக்கி செல்ல தடை செய்யப்படும். சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் தி.நகர் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்ல தடை செய்யப்படும். இத்தகைய வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை தி.நகர் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தியாகராய சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் தணிகாசலம் சாலை பன்னடுக்கு வாகன நிறுத்தமிடங்கள் தவிர விடுமுறை நாட்களில் பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி, பாஷ்யம் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி மற்றும் தண்டபானி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: