இசிஆர் அக்கரை பகுதியில் துணிகரம்; டாக்டர் வீட்டில் ரூ.35 லட்சம் நகை கொள்ளை: கொள்ளையர்களுக்கு வலை

துரைப்பாக்கம்:  இசிஆர் அக்கரை பகுதியில்  டாக்டர் வீட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி  பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை சி.கிளப் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அபர் ஜிந்தால் (39). டாக்டர். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சொந்த ஊரான டெல்லி அருகேயுள்ள நொய்டாவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த துணிமணிகள் சிதறிகிடந்தன. மேலும் பீரோவில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.5 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து கானத்தூர் போலீசில் அபர் ஜிந்தால் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து  கொள்ளை யடிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டு  விசாரணை நடத்தினர். பின்னர், கைரேகை நிபுணர்கள் வரவழக்கப்பட்டு கதவு, பீரோவில் பதிவான  கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு  செய்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: