ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் நோட்டீஸ்; ரகுமான் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கமில்லை: ஐகோர்ட்டில் ஜி.எஸ்.டி. ஆணையர் மனு தாக்கல்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கவில்லை எனக்கூறி 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி., ஆணையர் 2019ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி கடந்த 2020 பிப்ரவரியில் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் அதன் உரிமையாளர்கள் அவர்கள்தான். தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

6 கோடியே 79 லட்சம் ரூபாய் வரி செலுத்தவில்லை என்று கூறிய ஆணையர் 6 கோடியே 79 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளார் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஜி.எஸ் டி. நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை.

இசை குறிப்புகளை மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கவில்லை என்பதும், அவர் இசையமைத்து, பாடலாசிரியர்கள், பாடகர்கள், கருவி கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவைகளை பயன்படுத்தி பதிவு செய்தார் என்பதும் கண்டறியப்பட்டது. ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்என்று கூறப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Related Stories: