விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை தடய அறிவியல் ஆய்வுக்கு பிறகு பெற்றுக்கொள்ளலாம்: பாஜ நிர்வாகி சவுதாமணிக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு பிறகு பெற்றுக்கொள்ளலாம் என்று பாஜ செயற்குழு உறுப்பினர் சவுதாமணிக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆக்கிரமிப்பு கோயில்கள் இடிக்கப்படுவது குறித்து டிவிட்டரில் பதிவிட்டது தொடர்பாக தமிழக பாஜவின் செயற்குழு உறுப்பினர் சவுதாமணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்காக அவரின் செல்போனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தனது செல்போனை திரும்ப ஒப்படைக்க கோரி சவுதாமணி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்போனை தடயவியல் சோதனைக்கு அனுப்பியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செல்போன் எப்போது பறிமுதல் செய்யப்பட்டது, எப்போது விசாரணை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது என்று கேட்டார். அதற்கு போலீஸ் தரப்பு வழக்கறிஞர், கடந்த ஜூலை 9ம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் 15ம் தேதி நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது என்றார். இதையடுத்து நீதிபதி, தடயவியல் துறையின் ஆய்வுக்காக செல்போன் அனுப்பப்பட்டுள்ளதால் செல்போனை திரும்ப ஒப்படைக்க முடியாது. ஆய்வு முடிந்த பின் செல்போனை ஒப்படைக்க கோரி மீண்டும் கீழமை நீதிமன்றத்தை மனுதாரர் நாடலாம்.  உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்பிக்காத போலீஸ் அதிகாரி மீது டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: