பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி ஓய்வு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54ஆக குறைவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி பணி ஓய்வு பெற்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெற்றதையடுத்து, மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 13ம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர் நேற்று ஓய்வு பெற்றார். சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் நேற்று நடந்த பிரிவு உபச்சார விழாவில், அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் பேசும்போது, இரு முறை பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், 13 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றியவர் நீதிபதி எம்.துரைசாமி. பணிக்காலத்தில் 46,313 வழக்குகளை முடித்துள்ளார்.

பொறுமையாக வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்டு தீர்ப்பளிப்பார் என்றார்.பின்னர் ஏற்புரையாற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதித்துறை பணிகளை சிறப்பாக கவனிக்க உதவியாக இருந்த சக நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்களும், ஓய்வு பெறும் நீதிபதி எம்.துரைசாமியின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

இவரது ஓய்வு காரணமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54 ஆக குறைந்துள்ளது. காலியிடம் 21 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி ஓய்வுபெறுவதால், அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி டி.ராஜா இன்று முதல் பொறுப்புத் தலைமை நீதிபதியாக செயல்பட உள்ளார்.

Related Stories: