சென்னை: திருத்தணி அருகே திருவாலங்காடு பகுதியில் சிக்னல் பழுதால் திருப்பதி, கோவை மற்றும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் உரிய நேரத்தில் வேலைக்கு போக முடியாமலும், மற்றவர்கள் குறித்த நேரத்தில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். திருவள்ளூர் திருவாலங்காடு, மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் பாயின்ட் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக அரக்கோணம் வழித்தடம் வழியாக கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பதி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டு, வேலை மற்றும் சொந்த ஊருக்கு செல்பவர்கள் ரயிலிலேயே உட்கார்ந்து இருந்தனர்.