சென்னை: எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பெற புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள் நிறுவ ரூ.2,877 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள தொழிற் வளத்தினை மேம்படுத்தி நமது மாநில இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 326 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் தற்போது இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு மேலும் 11 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் புதிதாக துவங்கப்பட உள்ளன. அகில இந்திய அளவில் அதிக அளவிலான பயிற்சியாளர்கள் சேரக்கூடிய 10 தொழிற்பிரிவுகளில் ஒன்றான மின்கம்பியாள் தொழிற்பிரிவில் முதலிடம் பெற்ற விருதுநகர், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய மாணவி முனீஸ்வரி டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஒன்றிய அரசினால் கவுரவிக்கப்பட்டார். தரவரிசையில் இடம்பெற்ற மற்ற 56 பயிற்சியாளர்களுக்கு கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பாராட்டு சான்றிதழ் மற்றும் தேசிய தொழிற் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.