பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள்: திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.

சமூக நீதி, பெண் கல்வி, சம உரிமை மற்றும் ஏற்ற தாழ்வற்ற சமுதாயம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கத்தோடு தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெருந்தலைவர் பெரியாரின் 144வது பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், கே.ஆர்.பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், எ.வ.வேலு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு,திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் முதலமைச்சர் உடனிருந்தனர். தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் பலரும் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories: