ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான மெயின் தேர்வு தொடங்கியது: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது; கடும் சோதனைக்கு பிறகே தேர்வர்கள் அனுமதி

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடக்கிறது. தேர்வர்கள் கடும் சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. 2022ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1011 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 5ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 5.5 லட்சம் பேர் எழுதினர். தேர்வு நடைபெற்ற 17 நாட்களில், அதாவது ஜூன் 22ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது.

இத்தேர்வில் இந்தியா முழுவதும் 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 610 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மெயின் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு நடந்தது. இந்த தேர்வு கட்டுரை வடிவில் இடம் பெற்றிருந்தது. இந்த தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் தெரிவித்தனர். மெயின் தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் இத்தேர்வு நடந்தது.

அதாவது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இந்த தேர்வு நடந்தது. தேர்வு மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், தகவல் தொடர்பு உபகரணங்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.தேர்வு காலை 9 மணிக்குத்தான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு மையங்களுக்கு தேர்வு எழுதுபவர்கள் காலை 7 மணி முதலே வர தொடங்கினர். அவர்களை போலீசார் மூலம் கடும் சோதனை செய்தனர். அதன் பின்னரே அவர்கள் தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு நடந்த மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவிகூறியதாவது: சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று முதல் தாள் தேர்வு(கட்டுரை வடிவிலானது) நடந்தது. 2வது நாளான இன்று (17ம் தேதி) காலை இரண்டாம் தாள்(பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும், நாளை(18ம் தேதி) காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு 4) தேர்வும் நடக்கிறது.

தொடர்ந்து செப்டம்பர் 24ம் தேதி காலையில் இந்திய மொழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும், 25ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள், மாலை விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. இந்தியா முழுவதும் 24 நகரங்களில் மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இதில் தேர்வர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதி நிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கப்படும். அதன் பிறகு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். தகுதி நிலை அடிப்படையில் மாநில ஒதுக்கீடு செய்யப்படுவார்கள்.

Related Stories: