தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் உறுப்பினர் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை: இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி என்பவரையும், சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களையும் நீக்கி  கடந்த 2022 ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்க ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ் கவுரவ பதவியாக இருந்தாலும், ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்குவதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறி, குழந்தைகள் உரிமைகள் சட்டப்படி ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் நியமனத்தை ரத்து செய்தது சட்ட விரோதம் என்று கூறி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத்  தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தனி நீதிபதி, நியமனம் தொடர்பான குழந்தைகள் உரிமை சட்டப்பிரிவையும், நீக்குவதற்கு தொடர்பான சட்டப்பிரிவையும் கருத்தில் கொள்ளவில்லை. அதை கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அரசுக்கு நீக்குவதற்கான அதிகாரம் உள்ளது. ஒட்டுமொத்த உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள்  அமர்வு  தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து வழக்கு விசாரணை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் யாரும் செயல்பட முடியாது.

Related Stories: