சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் படம் இருந்த பேனர்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. உட்கட்சி மோதலால் அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மனு உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக பழனிசாமி அறிவித்தார். எனினும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பேனர்கள் அகற்றப்படாமலேயே இருந்தன.