கொளத்தூர் ஏரியில் 20 ஆண்டுகளாக இருந்த 43 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பெரம்பூர்: கொளத்தூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 43 கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடையின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் ரெட்ஹில்ஸ் சாலை மற்றும் 200 அடி சாலையில் கொளத்தூர் ஏரியை ஆக்கிரமித்து கார் பழுது பார்க்கும் கடை மற்றும் புதிய கார்களை வாங்கி விற்கும் கடை உள்ளிட்ட 43 கடைகள் செயல்பட்டு வந்தன. ஏரியை ஆக்கிரமித்து இந்த கடைகள் செயல்பட்டு வந்ததால் மழைக்காலத்தில் நீர் வெளியேற முடியாமல் தண்ணீர் நிரம்பி ஊருக்குள் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் பலமுறை சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் தொடர்ந்து காலி செய்யவில்லை. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நீர்வளத்துறை அதிகாரிகள் இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். இருந்தபோதிலும் அப்பகுதியை சேர்ந்த சிலர் தொடர்ந்து தங்களது கடைகளை நடத்தி வந்தனர். இதன் காரணமாக, நேற்று காலை நீதிமன்ற உத்தரவின்படி, நீர்வளத்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் மேற்பார்வையில் கொளத்தூர் உதவி கமிஷனர் சிவக்குமார் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு அனைத்து கடைகளையும் இடித்து தரைமட்டம் ஆக்கினர்.

இதைக்கண்ட சுமார் 15க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் திருமண மண்டபம் ஒன்றில் அவர்களை தங்கவைத்தனர். பிறகு அனைத்து கடைகளும் இடிக்கப்பட்டு நீர் வழித்தடத்தின் பாதை சரி செய்யப்பட்டது. தொடர்ந்து, மழைக்காலத்தில் அப்பகுதியில் தங்கு தடையின்றி நீர் செல்லும் எனவும், இதன் மூலம் ஊருக்குள் தண்ணீர் செல்வதை தடுக்க முடியும் எனவும் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 20 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளை நீர்வளத்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: