ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 100 பேருக்கு சிமென்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம்: அரசாணை வெளியீடு

சென்னை:  ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் 100 பேருக்கு சிமென்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம்  மானியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 2022-2023ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனை முகவராக நியமனம் பெற்று, ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் விற்பனை நிலையம் தொடங்கிட, தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

அவரது அறிவிப்பை தொடர்ந்து, 2022-2023ம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 80 ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்களுக்கும்,  20 பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கும் மொத்தம் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்குவதற்கான நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: