2022-23ம் நிதியாண்டில் ரூ.49 கோடியில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு புதிதாக 1,094 வீடுகள்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு

சென்னை: 2022-23ம் நிதியாண்டில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.49 கோடியில் 1,094 புதிய வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை: விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணத்துக்கு உரு கொடுக்கும் வகையில், 2022-23ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, “விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு வரும் நிதியாண்டில் மேலும் 1000 புதிய வீடுகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில், கட்டித் தரப்படும். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி மற்றும் திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில், சம தள பரப்பில் ஒரு வீட்டிற்கு ரூ.4,37,430 வீதம் 726 வீடுகளுக்கு ரூ.31 கோடியே 75 லட்சத்து 74 ஆயிரமும், மலைப்பகுதியில் ஒரு வீட்டிற்கு ரூ.4,95,430 வீதம் 368 வீடுகளுக்கு ரூ.18 கோடியே 23 லட்சத்து 18 ஆயிரம் ஆக மொத்தம் 1,094 வீடுகள் கட்டுவதற்கு ரூ.49 கோடியே 98 லட்சத்து 92 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட 1,094 வீடுகளை விரைந்து கட்டி முடிக்க தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.

Related Stories: