ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு புதிதாக 48 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு புதிதாக 48 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் சிறப்பாக செயல்படும் வகையில் புதிதாக 48 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணியிடங்களுக்கான நிதியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, ஒரு துணைச் செயலாளர், ஒரு சார்புச் செயலர், ஒரு கணக்கு அலுவலர், இரண்டு பிரிவு அலுவலர், இரண்டு கோர்ட் மாஸ்டர், நான்கு உதவி பிரிவு அலுவலர், நான்கு தனிச்செயலாளர், நான்கு நேர்முக உதவியாளர்கள், இரண்டு எழுத்தர், இரண்டு உதவியாளர், இரண்டு தட்டச்சர், ஒரு பதிவுறு எழுத்தர் ஆகிய பணியிடங்கள் பணி மாறுதல் மூலமும், ஒரு கணிப்பொறி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையிலும், மேலும் ஆறு ஓட்டுநர், பதினொரு அலுவலக  உதவியாளர், 2 இரவு காவலர்  மற்றும் 2 தூய்மை பணியாளர் ஆகிய பணியிடங்கள் பணியாளர் முகமை மூலமாகவும் ஆக மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான ஆணைய நிர்வாக செலவாக ஆண்டுக்கு ரூபாய் 2.30 கோடி மற்றும் பணியாளர் ஊதியத்திற்கு ரூ.1.80 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: