ராட்சத அலையில் சிக்கி சிறுவன் பலி

திருவொற்றியூர்: எண்ணூர் உலகநாதபுரத்தை சேர்ந்தவர்கள் ஜெய் ஆகாஷ்(14) மற்றும் கார்த்திக்(14). இவர்கள் இருவரும் எண்ணூரில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கின்றனர். நண்பர்களான இருவரும் நேற்று தாழங்குப்பம் கடற்கரையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராமல் ராட்சத அலையில் கார்த்திக் சிக்கி தவித்தான். இதை பார்த்த ஜெய் ஆகாஷ் நண்பனை காப்பாற்ற போராடினான். இதைப் பார்த்த கடலோரத்தில் இருந்தவர்கள் எண்ணூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிருக்கு போராடிய கார்த்திகை மீட்டனர். ஆனால் ஜெய் ஆகாஷை காணவில்லை. இதையடுத்து மீட்கப்பட்ட கார்த்திகை அரசு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டபோது ஜெய் ஆகாஷின் உடல் கரை ஒதுங்கியது. புகாரின்பேரில் எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: