தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக நேரடி நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக வெள்ளியூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார். திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக நேரடி நெல் கொள்முதல் நிலைய துவக்க விழா நடைபெறறது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) எல்.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் ஜே.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய குழுத் தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய திமுக செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு துணைத் தலைவர் எம்.பர்க்கத்துல்லா கான், மாவட்ட கவுன்சிலர் த.தென்னவன், ஒன்றிய கவுன்சிலர் டிஎம்எஸ்.வேலு, ஊராட்சி துணைத் தலைவர் டி.முரளி கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.இந்த விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, விவசாயிகளிடமிருந்து கொண்டு வரப்பட்ட நெல்களை தூற்றும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து, அரசு விதிகளுக்குட்பட்டு நெல்கொள்முதல் செய்யும் பணிகளை துவக்கி வைத்து, எதிர்வரும் சம்பா பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்ய ஏதுவாக 3 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது,திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி கொள்முதல் பருவத்தில் 25 ஆயிரத்து 340 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ள நிலையில், ஒரு ஹெக்டருக்கு 6 மெட்ரிக் டன் சராசரி மகசூல் வீதம் 1 லட்சத்து 52 ஆயிரம் மெட்ரிக் டன் மகசூல் எதிர்பார்க்;கப்படுகிறது. இதில் விற்பனை உபரி 65 ஆயிரம் மெட்ரிக் டன் என கணக்கிடப்படுகிறது.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக 52 இடங்களிலும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் மூலமாக 4 இடங்களிலும், தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஊத்துக்கோட்டை வட்டம் குருபுரம் கிராமத்தில் முதல் முறையாக 5 ஏக்கர் பரப்பளவில் 35 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மணிகள் சேமித்து வைப்பதற்கான திறந்த வெளி சேமிப்பு மையம் அமைக்கப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்மணிகள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், நிரந்தர திறந்த வெளி சேமிப்பு மையம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் திருவள்ளுர் - திருவாரூர் மாவட்டங்களுக்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து, குருபுரம் கிராமத்தில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பாதுகாப்பான சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது. இதனால் வருங்காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக சேமித்து வைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார். இதில், மாவட்ட கவுன்சிலர் இந்திரா பொன்குணசேகர், ஊராட்சி தலைவர் பப்பி முனுசாமி, திமுக நிர்வாகிகள் மனோகரன், கே.விமலாகுமார், வி.கன்னியப்பன், டி.மூர்த்தி, பி.நாகராஜ், கெஜா, வி.எம்.முருகேசன், இ.பி.ரவி, அஜித்குமார், குணா, எம்.நாகராஜ், எஸ்.நரசிம்மன், பி.பிரபு, முருகைய்யன், யுவராணி, குட்டி, அர்ஜூனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: