சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை மெட்ரோ பணிக்காக, தற்போது உள்ள இடத்திலிருந்து தற்காலிகமாக மாற்றப்பட உள்ளதால், மாற்று இடத்தை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2ம் கட்ட பணியான மெட்ரோ ரயில் திட்டம் கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26 கி.மீ தூரம் அமைய உள்ளது. போரூர், பூந்தமல்லி போன்ற புறநகர் பகுதிகளிலிருந்தும், மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் இருப்பவர்கள் மெரினாவுக்கு நேரடியாக மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் வகையில் அமைகிறது.