இலங்கை வசம் உள்ள 23 தமிழக மீனவர்கள், 95 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை வசம் உள்ள 23 தமிழக மீனவர்களையும், 95 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடந்த 9 மாதங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில் கடந்த 6ம் தேதி புதுச்சேரியை சேர்ந்த விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் கவனத்தை ஈர்க்கிறேன். தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின் வசம் 23 தமிழக மீனவர்களும், 95 மீன்பிடி படகுகளும் உள்ளன. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்கு தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: