காஞ்சிபுரம்: சென்னையில் பாரதி கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் நிகழ்வினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவினை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் .தா.மோ.அன்பரசன் தலைமை துவக்கி வைத்து மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். கடந்த நிதியாண்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தினை தற்பொழுது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி நிதியுதவி திட்டமாக மாற்றம் பெற்று புதுமைப்பெண் திட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 10 கல்லூரிகளை சார்ந்த 647 மாணவிகளுக்கு பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சுமார் 1795 மாணவிகளுக்கு பற்று அட்டை வழங்க நடவடிக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்ச்சியாக நடைபெறும் திட்டம் என்பதால் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் சென்றடையும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. நேற்று வருகை புரிந்துள்ள மாணவிகளுக்கு வரவேற்பு பை வழங்கப்பட்டுள்ளது. அத்தொகுப்பு பையானது, இரண்டு புத்தகங்கள் தொழில் வழிகாட்டி புத்தகம், . நிதி பற்றிய சிறு புத்தகம் மற்றும் வங்கி பற்று அட்டை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். பணம் வங்கி கணக்கில் வரப்பெற்ற விவரம் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்படும். இத்திட்டத்தினை மாணவிகள் முறையாக பயன்படுத்தி தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றி கொள்ளுமாறு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.