ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் பயனடையும் வகையில் கறவை மாடு வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்க ரூ.40 லட்சம் நிதி

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் பயனடையும் வகையில் கறவை மாடு  வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்க ரூ.40 லட்சம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, “2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் பயன்பெறும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க வாய்ப்புள்ள மாவட்டங்களில், தலா 50 உறுப்பினர்களை கொண்ட 40 புதிய பால் உற்பத்தியாளர் சங்கங்கள் அமைக்கப்படும்.

அந்த சங்கங்களுக்கு தேவைப்படும் பால் குவளைகள், பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பதிவேடுகள் வாங்க தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகை வழங்கப்படும்” என்று கூறினார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அதிக அளவில் கறவைமாடு வளர்ப்பு தொழிலை நம்பியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர்களுக்கு தனியாக பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத்தரம் மேன்மை அடையும் வகையில், முதற்கட்டமாக 1800 ஆதிதிராவிட மகளிர் பயனடைய ஏதுவாக ரூ.36 லட்சம் எஸ்சிஏ டூ எசிஎஸ்பி நிதியில் இருந்து மேற்கொள்ள நிர்வாக அனுமதியும், 200 பழங்குடியினர் மகளிர் பயனடைய ரூ.4 லட்சம் மாநில அரசு  நிதியில் இருந்து நிதி ஒப்பளிப்பு வழங்கியும், 40 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: