தனியார் மருத்துவமனைகளில் அதிக சிசேரியன் பிரசவங்கள் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலே அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதால் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ்நாடு முழுவதும் இன்று 35வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற நோக்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 50 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏ வேலு உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் பல சுணக்கங்கள் இருந்தபோதிலும், மக்களிடையே தாக்கங்கள் இருந்தபோதிலும் அரசு எடுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 96.26 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 90.15 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் பெரிய ஆர்வம் காண்பிக்கவில்லை. கொரோனா பாதிப்பு அதிகமாக இல்லாததும் இதற்கு ஒரு காரணம். தமிழகத்தில் 15 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். சுமார் 26 லட்சம் பேர் முதல் தவணையும், 86 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். உலகளவில் இன்றும் கொரோனா அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக உள்ளது. எனவே தமிழகம் தன்னை தற்காத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே தீர்வு.

பொதுமக்கள் தயங்காமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும். 18 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்களுக்கு செப்டம்பர் 30 வரை இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலே அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதால் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும். சிசேரியன் பிரசவங்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மழைக்காலத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் அதிகரிப்பது வழக்கம். எனவே மாவட்ட அளவில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு பரவல் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மருந்துகள் கைவசம் தயாராக உள்ளது. கடந்த காலங்களை விட டெங்கு பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: