பொன்னேரி: 3 மாத சம்பளம் வழங்காததால் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில், பொது சுகாதாரம் சார்பில் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்களாக சுமார் 40க்கும் மேற்பட்ட சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர் .
இவர்கள் கொரோனா காலத்திலும் சிக்கன் குனியா, மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க 55 ஊராட்சிகளிலும் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் கொடுக்காததால் குடும்ப நடத்த முடியாமல் தனியார் நிறுவனங்களில் இரவு பணிக்கு சென்று குடும்பம் நடத்தும் அவலம் உள்ளது. ஊர் திருவிழாக்கள், விநாயகர் சதுர்த்தி மற்றும் பண்டிகை நாட்களுக்குள் கூட குடும்பத்திற்கு பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.