சென்னை: விவசாய தொழில் புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.7.50 கோடியில் கறவை மாடுகள் வாங்க தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ.2.25 கோடி மானியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜவஹர் நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
“தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெருமளவில் விவசாய தொழில் புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பொருளாதாரத்தில் தற்சார்பு உடையவர்களாக மாற்றிடும் வகையில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 450 ஆதிதிராவிடர் மக்களுக்கு கறவை மாடுகள் வாங்க தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,02,50,000 மானியமாக ஒன்றிய அரசு நிதியில் இருந்து செலவிட நிர்வாக அனுமதி வழங்கியும் மற்றும் 50 பழங்குடியினர் மக்களுக்கு கறவை மாடுகள் வாங்கி பயனடைய ரூ.22,50,000 மாநில அரசு நிதியில் இருந்தும் பெற்று வழங்க நிதி ஒப்பளிப்பு வழங்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.