பெரியார் சிலை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு; ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பெரியார் சிலை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 4 வார காலத்துக்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், இனி இது போன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மதுரவாயலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு உள்ள பெரியார் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

அதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கனல் கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை எழுப்பூர் கோர்ட்டும், சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தன. அதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் கனல் கண்ணன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு கடந்த மாதம் 29-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், கனல் கண்ணன் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வெறுப்பை தூண்டும் வகையில் பேசியுள்ளதால் கனல் கண்ணுக்கு ஜாமின் வழங்க காவல் துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விசாரணை அதிகாரி முன்பு 4 வார காலத்திற்கு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதித்துள்ளனர். இனி இதுபோன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: