சென்னை: ஆவடி அடுத்த வீராபுரத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மற்றும் சவுபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா. இவர், அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு முதல்வரிடம் சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிந்தவுடன் சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி சவீதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மகளின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவியதற்காக முதல்வருக்கு சிறுமி டானியாவின் பெற்றோர் கண்ணீர் மல்க நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.