முருகப்பா குழுமம் டிஐ க்ளீன் மொபிலிட்டி நிறுவனம் தயாரித்துள்ள 3 சக்கர மின் வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: முருகப்பா குழுமத்தை சார்ந்த ‘டிஐ க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் தயாரித்துள்ள 3 சக்கர மின் வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.முருகப்பா குழும நிறுவனமான, டிஐ க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட், பயணிகளுக்கான மின் ஆட்டோக்கள், மின் சரக்கு வாகனங்கள் மற்றும் E-Rick போன்ற சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு, டிஐ குழுமம், அம்பத்தூரில் உள்ள தனது டிஐ சைக்கிள் வளாகத்தில், ரூ.140 கோடி ரூபாய் முதலீட்டில், 580 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மூன்று சக்கர மின் வாகனங்கள் உற்பத்தி செய்வதற்காக, 20.7.2021 அன்று தொழில் துறை சார்பில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன் அடிப்படையில், டிஐ க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தின் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மோன்ட்ரா எனும் வணிக பெயரிடப்பட்ட மூன்று சக்கர மின் வாகனங்கள் உற்பத்தியை மேற்கொண்டுள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் முருகப்பா குழுமத்தை சார்ந்த “டிஐ க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ‘மோன்ட்ரா’ எனும் வணிக பெயரில் தயாரித்து விற்பனை செய்யவுள்ள 3 சக்கர மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட ஒரு வருட காலத்திலேயே. இந்த உற்பத்தி திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பூஜா குல்கர்னி, டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அருண் முருகப்பன், டிஐ க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கல்யாண்குமார் பால், வணிக தலைவர் சூசன் ஜனா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: