ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு பேரவையில் அறிவித்த திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவு

சென்னை: சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவிகளுக்காக அறிவித்த திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார். சென்னை, தலைமை செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக  வெளியிடப்பட்ட ஆளுநர் உரை, வரவு செலவு திட்ட உரைகளில் இடம்பெற்ற அறிவிப்புகள், சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் வெளியிடப்பட்ட  பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்புகளை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், இத்திட்டங்களின் பயன் அவர்களை விரைந்து சென்றிடுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் ஜவஹர், இயக்குனர் ஆனந்த், பழங்குடியினர் நல  இயக்குனர் அண்ணாதுரை, தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: