பெரம்பூர்: வட மாநிலத்தில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரும் கும்பல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக உள்ளதால் பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக போதைப் பொருட்களை கடத்துவதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதனால், பெரம்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.அதன்படி, பெரம்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில், எஸ்ஐ ராமதாய் உள்ளிட்ட தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் பெரம்பூர் ரயில் நிலையம் 2வது நடைமேடையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தான்பூரில் இருந்து பெங்களூரூ செல்லும் விரைவு வண்டி பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்றபோது அதில் பயணம் செய்த பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த ராஜு குமாரை (23) சோதனை செய்தபோது 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.