பிரபல ரவுடி கொலை வழக்கில் 5 பேர் போலீசில் சரண்: பரபரப்பு வாக்குமூலம்

அண்ணாநகர்: அயப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சந்தீப்குமார் (30). கடந்த 2018ம் ஆண்டு ரவுடி ஆதித்யாவை வெட்டி கொலை செய்த வழக்கில் அல்லிகுளம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜரானார். பின்னர், அண்ணாநகர் மடுவங்கரை பகுதியில் ஆட்டோவில் சென்றபோது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு, தப்பி சென்றது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுமார் 30க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். 2 உதவி ஆணையர்கள், 7 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில், சந்தீப்குமார் கொலை தொடர்பாக, ரஞ்சித், சரவணன், ராஜா, அரவிந்த், தமிம் ஆகிய 5 பேர் நேற்று காலை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.  இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ‘‘ஆதித்யாவை, சந்தீப்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தார். இதற்கு பழிக்குப்பழியாக அவரை வெட்டி கொலை செய்தோம்,’’ என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 2 பைக் மற்றும் 3 கத்திகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: