திருத்தணி முருகன் கோயிலில் ரூ.1,38 கோடி உண்டியல் வசூல்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் 1 கோடியே 38 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் மற்றும் பல மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதுதவிர விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட லட்சக்கணக்கில் பக்தர்கள் திரளுகின்றனர். இவ்வாறு வருகை தருகின்ற பக்தர்கள், கோயிலில் உண்டியலில் காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 24 நாட்களில் வசூலான உண்டியல் பணம் மலைக்கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில், மொத்தம் 1 கோடியே 38 லட்சத்து 93 ஆயிரத்து 359 ரூபாய் வசூலாகியிருந்தது. இதுதவிர 320 கிராம் தங்கம் காணிக்கை செலுத்தப்பட்டு இருந்தது. 11,480 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். இதுபோல் திருத்தணி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள திருவாலங்காடு வடாரேண்ஸ்வரர் கோயில், மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில், கோட்டை ஆறுமுகசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. பின்னர் உண்டியல் பணம் அனைத்தும் திருத்தணியில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.

Related Stories: