கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் கைதான மக்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து பள்ளியில் நடந்த கலவரம், தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி  வழக்கறிஞர் ரத்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை,  அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி செயலாளர் மிரட்டுகிறார். அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும். கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்  என்று கோரியிருந்தார்.

 இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இழப்பீடு கோரிக்கையுடன் உள்ள வழக்கை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது என்பதால் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: