காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகம் வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்; உடனடியாக அகற்ற கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகம் வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையம் எதிரில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள், மாவட்ட எஸ்பி அலுவலகம், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் என பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதனால், மாவட்டம் முழுவதிலும் இருந்து எஸ்பி அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் புகார் அளிக்க தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

மேலும், காவலர்களுக்கு சலுகை விலையில் பொருள்களை விற்பனை செய்யும் போலீஸ் கேண்டீன், பல்பொருள் அங்காடி உள்ளிட்டவை இப்பகுதியில் உள்ளன. எனவே, நாள்தோறும் காவல் துறை உயரதிகாரிகள், காவலர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த வழியாக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் முறையான மழைநீர் வடிகால் இல்லாததால் அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது.

இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்திற்குள்ளேயே அனைத்து மகளிர் காவல்நிலையம் எதிரில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இது புகார் அளிக்க வரும் பொதுமக்கள், போலீசார் பெரும் சிரமம் அடைகின்றனர்.

Related Stories: