பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 இடங்களில் ரூ.1.65 கோடி மதிப்பில் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகளை கலாநிதி வீராசாமி எம்பி தொடங்கி வைத்தார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தமிழ் நகர், கண்ணதாசன் நகர், கிருஷ்ணமூர்த்தி சாலை, எஸ்ஏ காலனி மற்றும் இந்திரா நகர் ஆகிய 5 இடங்களில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்கள் சிதிலமடைந்து உள்ளதால், அங்கு பயின்று வரும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, மேற்கண்ட பகுதிகளில் உள்ள சிதிலமடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியிடம் மனு அளித்தனர். அதன்பேரில், மேற்கண்ட 5 இடங்களில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிதாக அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.