திருவொற்றியூர்: மாதவரம் பால்பண்ணை அருகே கே.கே.தாழை, அண்ணா தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக பெராக்கா கிறிஸ்தவ திருச்சபை இயங்கி வருகிறது. இக்கட்டிடம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, அக்கட்டிடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ததில், அக்கட்டிடம் முறையான அனுமதியின்றி கூடுதலாக கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் அக்கட்டிடத்துக்கு சீல் வைப்பது குறித்து கிறிஸ்துவ திருச்சபை பாஸ்டர் மரியசிங்கராயரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இதற்கு அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், வழக்கம்போல் இந்த கிறிஸ்தவ திருச்சபையில் ஏராளமான மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.