புழல்: புழல் அடுத்த வடகரை பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், அரசு தொழிற்பயிற்சி நிலையம், மகளிர் விடுதி ஆகியவை 15 ஏக்கர் பரப்பளவில் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பள்ளி ஆக தொடங்கப்பட்டு படிப்படியாக மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளியில் புழல், மாதவரம், செங்குன்றம், பாடியநல்லூர், பம்மதுகுளம், பொத்தூர், கும்மனூர், அலமாதி, வடபெரும்பாக்கம், கொசப்பூர், விச்சூர், நல்லூர், விஜயநல்லூர், ஆங்காடு, அருமந்தை, பெருங்காவூர், விளாங்காடுபாக்கம், வடகரை, புள்ளிலைன், தீர்த்தங்கரையம்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படித்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு உயரதிகாரிகள் என பலதரப்பட்ட நிலைகளில் உள்ளனர். இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்கப்பட்ட நிலையில் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளூரிலே படித்து வருகின்றனர்.