அரிமளம் அருகே ஓணாங்குடியில் மாட்டு வண்டி எல்லை பந்தயம்-வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருமயம் :  புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி வேணுகோபால்சாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணி அளவில் மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை. தேனி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 74 மாட்டுவண்டிகள் பங்கு பெற்றன. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என மூன்று பிரிவாக நடத்தப்பட்டது.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 10 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு அம்மன் பேட்டை சகாயராணி, 2ம் பரிசு கே.புதுப்பட்டி கே எ அம்பாள், 3ம் பரிசு தஞ்சை பூக்கொல்லை ரித்தீஸ்வரன், 4ம் பரிசு சிங்கவனம் ஜமீன் ராஜா ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. இதனை தொடர்ந்து நடைபெற்ற நடு மாடு பிரிவில் 24 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

இதன் பந்தயத் தொலைவு போய் வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதில் முதல் பரிசு கழுகுமலை பெரிய தம்பி, 2ம் பரிசு கே.புதுப்பட்டி கே ஏ அம்பாள், 3ம் பரிசு மாவூர் ராமச்சந்திரன், 4ம் பரிசு வெள்ளனூர் நரேஷ் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. இறுதியாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 40 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயம் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.இதன் பந்தயத் தொலைவு போய் வர 5 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் முதல் பரிசு நெய்வாசல் பெரியசாமி, பூந்தோட்டம் ஐயப்பன், 2ம் பரிசு அரிமளம் சேத்து மேல் செல்ல அய்யனார், சொக்கலிங்கம் புதூர் சக்தி, 3ம் பரிசு ஓனாங்குடி பொன்னழகி அம்மன், துறையூர் வசந்த், 4ம் பரிசு கே.புதுப்பட்டி கரைமேல் அய்யனார், நாட்டாணி சூரியா ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.பந்தயம் நடைபெற்ற அரிமளம் - புதுக்கோட்டை சாலையில் இருபுறமும் திரளான பொதுமக்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். அரிமளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: