1,2ம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டு பாடமா?... பள்ளிகளில் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வி உத்தரவு

சென்னை: தொடக்கப் பள்ளிகளில் 1, 2ம் வகுப்பு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக தொடக்கக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து  மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், 1 மற்றும் 2ம் வகுப்புகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு  வீட்டுப்பாடங்கள் கொடுக்கக் கூடாது என்று உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளதால், இந்த உத்தரவை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆதாரமாக, மாவட்ட வாரியாக பறக்கும் படை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை மாவட்ட கல்வி அதிகாரிகள் யாரும் அது குறித்து தொடக்க கல்வித்துறைக்கு அறிக்கை ஏதும் அனுப்பிவைக்கவில்லை.

எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் கடந்த 3 மாதங்களில் மாவட்டங்களில் ஆய்வு செய்ததை தேதிவாரியாக குறிப்பிட்டு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். பள்ளி வாரியாகவும் வீட்டுப் பாடம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்ற விவரத்தையும் அறிக்கையில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: