செங்கல்பட்டு: ஊராட்சி மன்ற அலுவலகங்களில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அன்று ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற வேண்டும். வேறு எவரேனும் தேசிய கொடி ஏற்றி குழப்பம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் எச்சரித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின திருநாள் அமுதபெருவிழாவை யொட்டி மத்திய மற்றும் மாநில அரசு உத்தரவுகளின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள், கட்டிடங்களில் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடியினை பறக்கவிட வேண்டும்.