சர்வதேச காத்தாடி திருவிழாவை முன்னிட்டு மைதானத்திற்கு செல்ல பாதை அமைப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நாளை முதல் வரும் 15ம்தேதி வரை சர்வதேச காத்தாடி  திருவிழா நடைபெற உள்ளது.  அதற்காக மைதானத்தை சமன்படுத்தி பாதை அமைக்கும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 15ம்தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, முதல் முறையாக காத்தாடி திருவிழா நாளை மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையும், குளோபல் மீடியா பாக்ஸ் ஆகியவை இணைந்து நடத்தும் சர்வதேச காத்தாடி திருவிழா நாளை தொடங்கி வரும் 15ம்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது.

இதில், இந்தியா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் பட்டம் பறக்க விடுவதில் கைதேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு, 100க்கும் மேற்பட்டோர் 10 அணிகளாக பிரிந்து காத்தாடிகளை பறக்க விட உள்ளனர். இந்நிகழ்வுக்காக, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட, டிடிடிசி ஓஷன் வியூவில் நடக்கிறது. இதற்காக, அங்கு ஜேசிபி எந்திரம் மூலம் இடத்தை சமன்படுத்தி பாதை அமைக்கும் பணி விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இந்த, காத்தாடி திருவிழாவை காண குழந்தைகளுக்கு இலவச அனுமதியும், பெரியர்கள் ரூ.150 செலுத்தி, நுழைவு சீட்டு பெற்று கண்டு ரசிக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: