அதிமுக அலுவலக சாவி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி கேவியட் மனு தாக்கல்

சென்னை: அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு கடந்த மாதம் 11ம் தேதி நடந்தபோது, கட்சி அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றதால் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறை ஆட்சியர் சீல் வைத்தார்.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘சீலை அகற்றி எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி மேல்முறையீடு செய்தார். தற்போது, இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘அதிமுக அலுவலகம் மற்றும் அதன் சாவியை ஒப்படைத்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும்போது எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: