ஆக்கிரமிப்பு அகற்ற கோரிய வழக்கில் கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத தாசில்தாருக்கு நீதிமன்ற நேரம் முடியும்வரை அமர்ந்திருக்கும் தண்டனை; உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு

சென்னை: ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத கலசப்பாக்கம் தாலுகாவின் அப்போதைய பெண் தாசில்தாரின் மன்னிப்பை ஏற்று நீதிமன்ற நேரம் முடியும்வரை நீதிமன்றத்திலேயே அமர வேண்டும் என்று தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா, கடலடி கிராமத்தில் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முருகன் என்பவர் 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 2017 டிசம்பரில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று முருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

 கடந்த 2018ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்த போது, நான்கு வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் நேற்று முன்தினம்  மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு நடந்த காலத்தில் பணியாற்றிய தாசில்தார் லலிதா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

அப்போது நீதிபதிகள், தாசில்தார் லலிதாவுக்கு நீதிமன்றம் நேரம் முடியும்வரை நீதிமன்றத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும் என்று தண்டனை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து, தாசில்தாரை மாலை வரை நீதிமன்றத்தில் ஊழியர்கள் அமரவைத்தனர். இந்த உத்தரவை கேட்ட தாசில்தார் நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதார்.

பின்னர், நீதிமன்ற நேரம் முடிந்தவுடன் மாலை அவர் விடுவிக்கப்பட்டார்.

Related Stories: