சென்னை உயர் நீதிமன்றம் அருகே வாடகை பாக்கி செலுத்தாத 256 கடைகளுக்கு அதிரடி சீல்; மாநகராட்சி நடவடிக்கை

தண்டையார்பேட்டை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ. 60 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாத 256 கடைகளுக்கு மண்டல அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். சென்னை பாரிமுனை வடக்கு கோட்டை சாலையில், ராஜா அண்ணாமலை மன்றம் எதிரே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி சார்பில் 256 சாலையோர கடைகள் கட்டப்பட்டு, குறைந்த வாடகைக்கு விடப்பட்டன. தற்போது இந்த கடைகளில் செல்போன், பொம்மை, எலக்ட்ரானிக், விளையாட்டு பொருட்கள் மற்றும் அனைத்து விதமான வெளிநாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்தன. ஒரு கடைக்கு வரி உட்பட ரூ. 443 மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொகையை மாதம்தோறும் மாநகராட்சிக்கு கடைக்காரர்கள் செலுத்த வேண்டும்.

ஆனால், இங்குள்ள 256 கடைக்காரர்களும், கடந்த பல ஆண்டாக மாநகராட்சிக்கு வாடகை பாக்கியை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தனர். அதன்படி, மாநகராட்சிக்கு ரூ. 60 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருந்தனர். இதை உடனடியாக செலுத்தும்படி, சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு பலமுறை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும், வாடகை நிலுவை தொகையை செலுத்த முன்வரவில்லை. இந்நிலையில், 5வது மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் நிதிபதி, ரங்கநாதன் தலைமையில் வரி மதிப்பீட்டாளர்கள் ரஹமதுல்லா, விஜயகிருஷ்ணன், உரிமம் ஆய்வாளர்கள் மணிகண்டன், பத்மநாபன் ஆகியோர், நேற்று அதிகாலை 5 மணிக்கு எஸ்பிளனேடு போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர், அங்கு மாநகராட்சிக்கு வாடகை நிலுவை வைத்திருந்த 256 கடைகளை பூட்டி மண்டல அதிகாரிகள் சீல் வைத்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் தலைமையில் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: