நன்னடத்தை பிணை உறுதிமொழி மீறிய இரண்டு ரவுடிகளுக்கு 8 நாட்கள் சிறை: துணை கமிஷனர் அதிரடி

பெரம்பூர்: பெரம்பூர் தீட்டி தோட்டம் மூன்றாவது தெரு பகுதியை சேர்ந்தவர் பெல் என்கின்ற கமலக்கண்ணன் (32). பெரம்பூர் நீளம் தோட்டம் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் சரோ என்கின்ற சரவணன் (33). இவர்கள் இரண்டு பேரும் திருவிக நகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள். இவர்களில் கமலக்கண்ணன் மீது இரண்டு கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோன்று, சரவணன் மீது இரண்டு கொலை, வழக்கு ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 6 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கமலக்கண்ணன் மற்றும் சரவணன் இரண்டு பேரும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் புளியந்தோப்பு காவல் துணை கமிஷனர் ஈஸ்வரனை நேரில் சந்தித்து, ‘நாங்கள் இனி குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்’ என பிரமாணப்பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 20ம் தேதி இரவு இனியன் என்பவரிடம் தகராறு செய்து அவரை கடுமையாக தாக்கி உள்ளார். இதுகுறித்து திருவிக நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் குற்றச்செயலில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி பிரமாணப்பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருவிக நகர் இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கமலக்கண்ணன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் 80 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: