தமிழகம் முழுவதும் 181 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தொன்மையான 181 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 35 வது வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது.  

அதில், சேலம் மாவட்டம், சிவதாரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஆத்தூர் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருள்மிகு முட்டத்துராயப் பெருமாள் திருக்கோயில், கரூர் மாவட்டம், புகளூர் அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம், அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில், மயிலாடுதுறை மாவட்டம், கள்ளிக்காடு அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அருள்மிகு அய்யனார் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், நாராயணம்மாள்புரம், அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், அருள்மிகு சாஸ்தா திருக்கோயில் உட்பட 181 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் 1000 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்து பராமரிக்கும் பொருட்டு புனரமைப்பு பணிக்கான மதிப்பீட்டினை பரிசீலித்து அதன்பின்பு திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் இணை ஆணையர் பொன். ஜெயராமன், தலைமை பொறியாளர் கே.தட்சிணாமூர்த்தி, ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கோவிந்தராஜ பட்டர், ஆனந்த சயன பட்டாச்சாரியர், கே.சந்திரசேகரபட்டர், தலைமை பொறியாளர் முதுநிலை ஆலோசகர் கே.முத்துசாமி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர்கள் சீ.வசந்தி, சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி, கல்வெட்டு படிமங்கள் நிபுணர் சிவானந்தம், உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: