தேவதானப்பட்டி: தொடர் மழை காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் மஞ்சளாறு அணை கரையோர மக்களுக்கு இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், சோத்துப்பாறை அணை கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடியாகும். அதன் மொத்த கொள்ளளவு 487.35 மி கனஅடியாகும். கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு சீரான நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று மாலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு வினாடிக்கு 276 கனஅடி நீர் வந்தது. நேற்று இரவு 9 மணிக்கு அணை 55 அடியை எட்டியதால் அணைக்கு வரும் 276 கனஅடி தண்ணீரை அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. தற்போது அணை 55 அடியும், மொத்த கொள்ளளவு 435.32 மி கனஅடியாகவும் உள்ளது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மஞ்சளாறு ஆற்றங்கரையோர தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலப்பட்டி, வத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை, செக்காபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மூன்றாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.