ஆவடி: வெள்ளானூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே ஆகாய தாமரைகள் மற்றும் பாசி படர்ந்துள்ளதால் பொது குளம் சுத்தமின்றி காணப்படுகிறது. குளத்தை தூர்வாரி சீரமைத்து குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆவடி அருகே வெள்ளானூர் ஊராட்சி அலுவலகம் எதிரே பொது குளம் உள்ளது. இக்குளத்தின் நீரை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வருகின்றனர். நாளடைவில் இக்குளத்தில் கழிவுநீர் திறந்து விடப்பட்டது. மேலும், குப்பை கழிவுகளும் கொட்டப்பட்டன. இதனால் முறையான பராமரிப்பின்றி ஆகாய தாமரை மற்றும் பாசிககள் படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.