ரூ.29.75 கோடியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு பல்வேறு இடங்களில் ரூ.29.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், உடுமலைப்பேட்டையில் ரூ.5.56 கோடி, நாகர்கோவிலில் 72 லட்சம் ரூபாய், விருதுநகருக்கு 2.05 கோடி ரூபாய், திருச்சிக்குபுதிய தொழிற்பிரிவிற்கு ரூ.99 லட்சம் செலவில் பணிமனை மற்றும் வகுப்பறைக் கட்டிடம், கோவையில் 2.50 கோடியில் கட்டப்பட்டுள்ள மாதிரி தொழிற்பயிற்சி நிலையத்திற்கான ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி அறைகள், நூலகம், பணியமர்த்தும் அலுவலகம் ஆகிய கட்டிடங்கள்.

சென்னை, கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 3.30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (பொது), சென்னை மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) அலுவலகம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான தேசிய தொழில்நெறி சேவை மையக் கட்டிடங்கள், மதுரை (மகளிர்), தூத்துக்குடி, நாகலாபுரம், நாமக்கல், அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 14.63 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டிடங்கள் என மொத்தம் 29.75 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.இந்த புதிய கட்டிடங்களை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் முகமது நசீமுத்தின் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: