விரைவு பஸ்களில் பார்சல் அனுப்பும் திட்டத்தில் யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் அனுப்புவதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் யுபிஐ முறையில் கட்டணம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமாக 1,110 பஸ்கள் உள்ளன. இவை, தமிழகம் மட்டும் அல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் பேருந்து சேவையினை வழங்கி வருகிறது. இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாய்யை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மூன்று சுமைப் பெட்டிகளை நாள் மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு விடும் திட்டம் ஆக.3ம் தேதி முதல் அமலாகும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சுமைப்பெட்டியை வாடகைக்கு பெறுவதற்கு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பார்சல் அனுப்ப ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். யுபிஐ முறையில் கட்டணம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதே போல் பேருந்துகளில் கூரியர் அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது என்றனர்.

Related Stories: