கலைஞர் கருணாநிதி நினைவுதினத்தையொட்டி சென்னையில் வருகிற 7ம் தேதி சர்வதேச மாரத்தான் போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கலைஞர் கருணாநிதி நினைவுதினத்தையொட்டி சென்னையில் வருகிற 7-ம் தேதி சர்வதேச மாரத்தான் போட்டி நடக்கிறது. சென்னை, கலைஞர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி (ஆகஸ்டு 7-ந்தேதி), கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இந்த மாரத்தான் போட்டிக்கான இறுதி பதிவை, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இந்தாண்டு கலைஞர் நினைவு சர்வதேச மாரத்தான் போட்டி ஆகஸ்டு 7-ம் தேதி நடத்தப்படுகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர். இன்று இரவு 12 மணி வரை இணையதளப் பதிவு நடைபெறுகிறது. 40 ஆயிரம் பேர் வரை இப்போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இப்போட்டியும் ஆசிய சாதனைப் படைக்க இருக்கிறது.

போட்டியில் 42 கி.மீ. மற்றும் 21.1 கி.மீ. பிரிவுப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-ம் பரிசு 50 ஆயிரம், 3ம் பரிசு ரூ.25 ஆயிரமாகும். 10 கி.மீ. பிரிவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு 25 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.15 ஆயிரமாகும். 5 கி.மீ., பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசு 10 ஆயிரமாகும். பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்டு 7-ம் தேதி வழங்குகிறார். இப்போட்டி பெசன்ட் நகரில் தொடங்கி மாநிலக் கல்லூரி வரை சென்று திரும்ப இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: